பி.கு. தீபா, மதுரை
ஒரு நாள் ஒரு இளைஞன் தன் தந்தையிடம் “என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?” என்று கேட்டான். பதில் கூறுவதற்கு மாறாக தந்தை கூறினார், “ மகனே! இந்த கல்லை எடுத்துக் கொண்டு சந்தைக்கு போ. யாராவது விலை என்னவென்று கேட்டால் இரண்டு விரலை மட்டும் நீட்டு, மற்றபடி ஒன்றும் பேசாதே!”.
இளைஞன் சந்தைக்குப் போனான். ஒரு பெண்மணி அவனிடம் , “ இந்த கல் என்ன விலை? நான் இந்தக் கல்லை என் தோட்டத்தில் வைக்க ஆசைப்படுகிறேன்” என்றார். இளைஞன் ஒன்றும் பேசாமல் இரண்டு விரல்களை மட்டும் நீட்டினான். “ஓ! இரண்டு ரூபாயா? இந்தா எடுத்துக் கொள்”, என்றார் அந்தப் பெண்.
இளைஞன் வீட்டிற்குச் சென்று தந்தையிடம், “ ஒரு பெண் இரண்டு ரூபாய்க்கு இந்தக் கல்லை வாங்க விரும்பினார்”, என்று கூறினான். அதற்கு தந்தை, “மகனே! இந்தக் கல்லை எடுத்துக் கொண்டு அருங்காட்சியகத்திற்கு போ. யாராவது இதை வாங்க விரும்பினால் இரண்டு விரலை மட்டும் நீட்டு, ஒன்றும் பேசாதே!” என்று கூறினார்.
இளைஞன் இப்போது அருங்காட்சியகம் சென்றான். அங்கிருந்த ஒருவர் அந்தக் கல்லை விரும்பினார். இளைஞன் ஒன்றும் பேசாமல் இரண்டு விரல்களை மட்டும் நீட்டினான். “ஓ! இருநூறு ரூபாயா? இதோ வாங்கிக் கொள்” என்றார் அவர். இளைஞன் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு ஓடி வந்தான். “அப்பா ஒரு மனிதர் இருநூறு ரூபாய்க்கு இந்தக் கல்லை வாங்க விரும்பினார்”, என்றான். “மகனே! இந்தக் கல்லை எடுத்துக் கொண்டு விலை உயர்ந்த இரத்தினங்கள் விற்கும் கடைக்குச் சென்று கடை முதலாளியிடம் காட்டு. ஒன்றும் பேசாதே! விலை என்ன என்று கேட்டால் இரண்டு விரலை மட்டும் காட்டு”, என்று தந்தை கூறினார்.
இளைஞன் விலை உயர்ந்த இரத்தினங்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அந்தக் கல்லை முதலாளியிடம் காட்டினான். “எங்கிருந்து இந்தக் கல் உனக்கு கிடைத்தது. இது உலகிலேயே மிக அரிய மதிப்பு மிக்க கல். இது என்னிடம் இருக்க வேண்டுமென ஆசைப் படுகிறேன். எவ்வளவு விலைக்கு நீ இதை விற்க விரும்புகிறாய்?’ என்று கடை முதலாளி கேட்டார். இளைஞன் இரண்டு விரலை நீட்டினான். “ஓ! இரண்டு கோடி ரூபாயா? நான் வாங்கிக் கொள்கிறேன்”, என்றார் கடை முதலாளி.
இளைஞனுக்கு பதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டிற்கு ஓடினான். “அப்பா! அந்த கடைக்காரர் அந்தக் கல்லை இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்க விரும்புகிறார்”, என்றான். தந்தை கூறினார், “ மகனே! இப்போது வாழ்க்கையின் மதிப்பு உனக்கு தெரிகிறதா? புரிந்து கொள், நீ எங்கிருந்து வந்தாய்? எங்கே பிறந்தாய்? உன் தோலின் நிறம் என்ன? எவ்வளவு செல்வந்தனாய் நீ பிறந்தாய்… இவையெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எந்த இடத்தில் உன்னை நீ வைக்க வேண்டும் என்று நீ தான் முடிவெடுக்க வேண்டும். எப்படிப்பட்ட மனிதர்கள் உன்னைச் சுற்றி இருக்க வேண்டும் என்று நீ தான் முடிவெடுக்க வேண்டும். தன்னைத் தான் எவ்வாறு முன்னேற்றுவது… நீ உன் வாழ்க்கை முழுவதையும் இரண்டு ரூபாய் கல் என்று எண்ணி வாழ்ந்தால், உன்னைச் சுற்றி உள்ள மனிதர்களும் உன்னை இரண்டு ரூபாய் மதிப்புடைய கல் என்று தான் பார்ப்பார்கள்”.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வைரம் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நம்முள் உள்ள வைரத்தின் மதிப்பை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். நாம் சந்தையிலா? விலை மதிப்பு மிக்க வைரங்களுடனா? என நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். நாம் மற்றவர்களையும் விலை மதிப்புள்ள வைரம் என்று பார்க்க வேண்டும்.